பெண்களுக்கு எதிரான வழக்குகள்: சுமுகமாக தீர்க்க புதிய திட்டம்

கோவை: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு விரைவாக தீர்வுகாண, நாரி அதாலத் திட்டம் பத்து மாவட்டங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் நாரி அதாலத் எனும் மாற்று குறைதீர் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை கிராம பஞ்சாயத்து அளவில் அமைக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, சேலம், மதுரை, திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் இவ்வமைப்பு அமைக்கப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான குழந்தை திருமணம், குடும்ப வன்முறை, வரதட்சனைக் கொடுமை மற்றும் சிறு தகராறுகளுக்கு நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் சுமுகமாகப் பேசித் தீர்வு காண 7 உறுப்பினர்கள் கொண்ட இக்குழு உருவாக்கப்படும்.

முதற்கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் அதிக அளவில் பதிவாகும் வட்டாரங்களை தேர்வு செய்து இக்குழுவை அமைக்க இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது, ‘அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் உள்ளன. பெண்கள் உதவி எண்ணிற்கு வரும் அழைப்புகள் மாற்றிவிடப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இக்குழுவில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர், என்.ஜி.ஓ.,வை சேர்ந்தவர்கள் கட்டாயம் இடம் பெறுவர்.

இவர்களுக்கு திட்டம் தொடர்பான பயிற்சிகளும் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்படவுள்ளன. வழக்குளை சமரச முறையில் தீர்க்கவும், விரைவான நீதியை வழங்க உதவும். இதன் செயல்திட்டம் அடிப்படையில் பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்,’ என்றனர்.

Source link