ராமேசுவரம்,
பழைய ரெயில் பாலம்
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் பழைய ரெயில் பாலம் மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. சுமார் 110 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வந்த பாம்பன் பழைய ரெயில் பாலத்தின் அருகிலேயே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் திறக்கப்பட்டது. கடலுக்குள் உள்ள பழைய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை வெட்டி அகற்றும் பணியானது கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரு கிறது. இதற்காக ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு தனியார் நிறுவனம் மூலம் பாம்பன் பழைய ரெயில் பாலத்தை வெட்டி அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. அதற்காக தூக்குப்பாலத்தின் அரு கில் கிரேன் ஒன்று நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வெல்டிங் மூலம் தூக் குப்பாலத்தின் இரும்பு கம்பிகளை பகுதி வாரியாக வெட்டி எடுக்க வருகின்றது.
தூக்குப்பாலத்தின் ஒரு பகுதி
இந்த நிலையில் தூக்குப்பாலத்தின் ஒரு பகுதியானது முழுமையாக வெட்டி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு வெட்டி அகற்றப்பட்ட தூக்குப்பாலத்தின் உதிரிபாகங்கள் அனைத்தும் பாம்பன் ரெயில் பாலத்தின் நுழைவுப்பகுதியில், ரெயில்வே நிலையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் தூக்குப்பாலத்தின் மற்றொரு பகுதியை வெட்டி அகற்றும் பணியானது வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்று கூறப்படுகிறது. பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக தூக்குப்பாலத்தின் மற்றொரு பாதியையும் முழுமையாக வெட்டி அகற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
