புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட செல்பி வீடியோவை நீக்கியதற்கு மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது; அதிகாரிகளை அரசு நேரில் அழைக்க வாய்ப்புள்ளது.
அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பது மற்றும் தேர்வு முறைகளை சீரமைப்பது தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதிகளுடன் பிரதமர் மோடி செல்பி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ 24 மணி நேரத்திற்குள் 30.3 கோடி பார்வைகளை கடந்து உலக சாதனை படைத்தது.
அப்போது பிரதமர் மோடியின் பேஸ்புக் வீடியோ சிறிது நேரம் தவறுதலாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நீக்கம் நிகழ்ந்ததாகத் தெரிவித்து, பின்னர் அந்த வீடியோ மீண்டும் பேஸ்புக்கில் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டது என விளக்கம் அளித்தது.
இந்தச் சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரித்து வருகிறது, மேலும் தற்காலிக நீக்கம் குறித்து விளக்கமளிக்க மெட்டா அதிகாரிகளை அரசு நேரில் அழைக்க வாய்ப்புள்ளது. மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், ‘பிரதமர் மோடியின் செல்பி வீடியோ தவறுதலாக அகற்றப்பட்டு, பின்னர் மீட்டெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
