3வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து : பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்த அமைச்சர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.வி. அர்கேல்க்கர் கலந்து கொள்ள உள்ளார். அதனால் தொடக்கத்தில் தேசிய பாடலான வந்தேமாதரம் பாடல் முதலாவதாகப் பாடப்படும். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம், மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட வேண்டும் என ஆளுநர் மாளிகை உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். 

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று (28.07.2026) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மொத்தம் 3,787 பேர் பட்டம் பெறத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் முனைவர் பட்டம் மற்றும் பதக்கங்கள் பெறவிருந்த 871 பேருக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் நேரடியாகப் பட்டம் வழங்குவார் எனப் பல்கலைக்கழகம் முன்கூட்டியே அறிவித்திருந்தது. இதையடுத்து, 871 பேரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிதம்பரனார் அரங்கில் பட்டமளிப்பு விழாவுக்காகத் திரண்டிருந்தனர். 

இந்நிலையில் ஆளுநர் ஆர்.வி. அர்கேல்க்கர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழாவில் வந்தேமாதரத்திற்கு முதலிடம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது. இதனையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாவதாகக் கடைசி இடம் அளிக்கப்பட்டது. முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படும் எனத் துணைவேந்தர் அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து, அமைச்சர் விஸ்வநாதன் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link