மதுரை: பழநி நில மோசடி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி திமுக, அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்ற கிளை ஒத்திவைத்துள்ளது.
பழநி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு பதிவாளரைக் கொண்டு, பத்திரப் பதிவு செய்தது, உடனடியாக புகார் அளிக்காதது, நிலத்தின் மதிப்பை குறைவாக மதிப்பீடு செய்தது உள்ளிட்ட பல்வேறு மோசடி நடந்துள்ளது. இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே விவகாரம் தொடர்பாக திமுகவை சேர்ந்த பழநி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “இது போன்ற வழக்குகள் தனி நீதிபதியால் விசாரிக்கப்படும் பிரிவின் கீழ் வருவதால், இரு வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பது குறித்து, தனி நீதிபதி கருத்துக்களைக் கேட்டு விசாரணைக்கு பட்டியலிட பரிசீலிக்கப்படும்” என்றனர். மேலும், விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
