காங்கிரசும், ராகுலும் பாஜவின் பி டீம்; சொல்கிறார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: காங்கிரசும், ராகுலும் பாஜவின் பி டீம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி;

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கருத்துகளுக்கு மாறாக, சபரிமலை தங்க கவசம் விவகாரத்தின் விசாரணையை கேரள ஐகோர்ட் கண்காணித்து வருகிறது. விசாரணையில் நீதிமன்றம் எந்த குறையையும் காணவில்லை.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய எவரையும் கேரள அரசு விட்டு வைக்காது. எங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஏப்.9ம் தேதி நடக்கும் தேர்தலில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கேரளாவில் கல்வித்துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இங்குள்ள கல்வி நிறுவனங்களின் தரம் சர்வதேச அளவை எட்டி இருக்கிறது.

காங்கிரசும், ராகுலும் பாஜவின் பி டீம் ஆகும். காங்கிரஸ் சமரச அரசியல் செய்து வருகிறது. வகுப்புவாதத்தில் ஈடுபடும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை குழுக்களிடம் ஆதரவை தேடுகிறது. ஆனால் இடது ஜனநாயக முன்னணியானது எந்தவிதமான வகுப்புவாதம் என்றாலும் அதை எதிர்க்கிறது. வகுப்பு வாதத்தை ஆதரிக்கும் எந்த குழுவிடமும் ஆதரவு கேட்பது இல்லை.

வயநாடு மறுவாழ்வு நிதியளிப்பு விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் கேரளாவுக்கு எதிராக மத்திய அரசு விரோத போக்குடன் நடக்கிறது. மாநிலத்திற்கு மத்திய அரசு பெரிதும் உதவியதாக பாஜ மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் கூறியது முட்டாள்தனம்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

முன்னதாக, கேரள முதல்வரை தவிர நாட்டிலுள்ள மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் கைது செய்துள்ளன அல்லது விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளன என்று ராகுல் கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link