மாணிக்கம் தாகூர், நயினார் மீதான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து!

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், பிரசாரத்திற்கு தடை இருந்தபோது, தன் சமூக வலை தளத்தில் பிரசாரம் செய்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த புகார் அடிப்படையில், விருதுநகர் மேற்கு போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணிக்கம் தாகூர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணிக்கம் தாகூர் தரப்பில், மாஜிஸ்திரேட்டின் முன் அனுமதி பெறாமல், வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மாணிக்கம் தாகூர் மீது பதிவு செய்யப்பட்ட தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதேபோல், திருநெல்வேலியில், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் நீதிபதி ரத்து செய்தார்.

Source link