பீஜிங்: செயற்கை சூரியன் திட்டத்தின் புதிய மைல்கல்லாக, 5.82 லட்சம் கிலோ எடையுள்ள, உலகின் மிகப்பெரிய மின்காந்தத்தை உருவாக்கி, நம் அண்டை நாடான சீனா சாதனை படைத்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதால், காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் இந்த எரிபொருட்கள் தீர்ந்து விடும் அபாயமும் உள்ளது.
சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் பெற்றாலும், அதிக அளவில் கிடைப்பதில்லை. இதற்கு மாற்றாக, சூரியனில் இயற்கையாக நடக்கும் அணுக்கரு இணைவு முறையை பூமியில் பின்பற்றி, தடையில்லாமல் துாய்மையான மின்சாரத்தைப் பெற சீன விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.
அதற்காக சீனாவில் உருவாக்கப்பட்டது தான் செயற்கை சூரியன் திட்டம். இந்த செயற்கை சூரியனை உருவாக்குவதற்கு மிகவும் சக்திவாய்ந்த மின்காந்தங்கள் தேவை.
சூரியனுக்குள்ளே இருக்கும் கடுமையான வெப்பத்தையும், வாயுவையும் வழக்கத்தை விட மிகக் கடுமையான வெப்பத்திற்கு உட்படுத்தப்படும். அதில் இருந்து உருவாகும் மின்சக்தி எனப்படும் பிளாஸ்மாவையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் பூட்டி வைக்க இந்த காந்தங்கள்தான் பயன்படுகின்றன.
இந்நிலையில், சீன அறிவியல் அகாடமியின் பிளாஸ்மா இயற்பியல் நிறுவனம், ஆங்கில எழுத்தான ‘டி’ வடிவத்தில், 69 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்ட, 5.82 லட்சம் கிலோ எடை கொண்ட பிரமாண்டமான மின்காந்தத்தை தயாரித்துள்ளது.
இந்த காந்தம், 10 கோடி டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் உருவாக்கப்படும் பிளாஸ்மாவை, சக்திவாய்ந்த தன் மின்காந்தப் புலத்தால் கட்டுப்படுத்தி குளிர்விக்கிறது. இந்த புதிய மின்காந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி பெற்றது.
இதன் வாயிலாக, 2027-ம் ஆண்டுக்குள் சிறிய அளவிலான சோதனை உலையை உருவாக்குவது, 2030ல் அணுக்கரு இணைவு மூலம் வணிக ரீதியாக மின்சாரம் உற்பத்தி செய்வது என்ற தன் லட்சிய திட்டத்தையும் சீனா எட்டுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் மின்சார தட்டுப்பாடும் இருக்காது, காற்று மாசுபாடும் ஏற்படாது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
