“தி.மு.க இல்லாமல் ‘இந்தியா’ கூட்டணியே இல்லை”

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில்,  அமைதி காத்து வந்த அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மௌனம் கலைத்திருக்கிறார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் வி.சி.க முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், தான் எப்படி விடுதலை சிறுத்தை கட்சிக்குள் வந்தேன் என்பதையும் தனக்கு எப்படி முதலிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது என்பதையும் கூறியுள்ளார்.

வி.சி.க சார்பில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக பணியாற்றியதை பற்றியும் ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் தற்போதைய நிலை என்ன என்பதையும் தி.மு.க இல்லாமல் இந்தியா கூட்டணி இல்லை என்பதையும் ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.

இடதுசாரிகள், வி.சி.க, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் அமைந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆளுநர் மற்றும் பா.ஜ.க அரசுடன் சமரசம் செய்து கொண்டதனால், தற்போது அது தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று ஆளுர் ஷாநவாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு நிர்வாகத்தில் அனுபவம் பெறுவதற்காக ஆறு மாதம் அல்ல ஐந்து வருடங்களைக் கூட அவகாசமாக அளிக்கலாம். ஆனால் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளும்போது ஆறு நொடிகள் கூட பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.

தி.மு.க அரசு சட்டமன்றத்தில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அதனால், ஆளுநருக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. ஆனால், தமிழக வெற்றிக்கழக அரசு ஆளுநருடனும் மத்திய அரசுடனும் இணக்கமாக செல்ல வேண்டும் என்று கூறியதன் விளைவாக இன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக பாடப்படும் நிலைக்கு வந்து நிற்கிறது என்று ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி குறித்து பேசிய ஆளூர் ஷாநவாஸ், இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் இருந்தது போல வேறு எங்கும் உறுதியாக இருந்ததில்லை. தி.மு.க இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை என்று கூறினார்.

ஆளூர் ஷாநவாஸ் தி.மு.க-வை நோக்கி நகர ஆரம்பிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மூன்று மாதங்களாக அமைதி காத்தேன். தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகளை கவனித்து வந்திருக்கிறேன். நான் வைக்கும் விமர்சனங்கள் அரசு நிர்வாக ரீதியானது அல்ல. ஏனென்றால், அரசில் பங்கேற்றுள்ள அனைவரும் புதியவர்கள், அவர்களுக்கு அனுபவம் தேவை. ஆனால், கொள்கை நிலைப்பாட்டில்  சமரசம் செய்து கொள்வதையே நான் விமர்சிக்கிறேன். தமிழக வெற்றிக்கழக அரசு மீது எனக்கு எந்த காழ்ப்பும் வன்மமும் இல்லை.
இந்த விமர்சனங்களால் நான் தி.மு.க-வை நோக்கி நகர்கிறேன் என்று புரிந்து கொள்ளக் கூடாது” என்று ஆளூர் ஷாநவாஸ் கூறினார்.

Source link