அரசியல் சூட்டை பின்னே தள்ளிய இயற்கையின் சூடு; தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: சட்டசபை தேர்தல், தொகுதி பங்கீடு என அரசியல் தட்பவெப்பம் வழக்கத்துக்கு மாறாக எகிறி வரும் சூழலில் தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், சுருளக்கோடு, மாம்பழத்துறை, அணைகெடங்கு பகுதிகளில், தலா 3 செ.மீ., மழை பெய்தது.

இந்த சூழலில், மன்னார் வளைகுடா முதல், வடக்கு உள் கர்நாடகா வரை, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வரும் 23, 24ம் தேதிகளில், கோவை, நீலகிரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 25, 26ம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும்.

வெப்ப நிலையை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், அதிகபட்ச வெப்பநிலை, ஓரிரு இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link