எழுதியவர்: கிருதி சோனாலி
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி படமான ‘ஜன நாயகன்’ திரைப்படம் முதல் நாளிலும், வார இறுதி நாட்களிலும் சிறப்பான வசூலைப் பதிவு செய்த நிலையில், வார நாட்கள் தொடங்கியதை அடுத்து எதிர்பார்த்தபடி வசூலில் சரிவை சந்தித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
திரைப்பட வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் (Sacnilk) வெளியிட்ட தகவலின்படி, 6-வது நாளான நேற்று (ஜூலை 28) இந்தியாவில் ரூ.8 கோடி நிகர வசூலை இப்படம் ஈட்டியுள்ளது. இது நேற்று முன்தினம் (ஜூலை 27) கிடைத்த ரூ.10.65 கோடி வசூலை ஒப்பிடும்போது 24.9 சதவீதம் குறைவாகும். இதன் மூலம், இந்தியாவில் மட்டும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் மொத்த நிகர வசூல் ரூ.143.40 கோடியாகவும், மொத்த (Gross) வசூல் ரூ.167.57 கோடியாகவும் உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ.246.07 கோடி வசூல் செய்துள்ளது.
நேற்று (ஜூலை 28), படத்தின் மொத்த திரையரங்கு பார்வையாளர் வருகை (Occupancy) 25.73 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதில் காலை காட்சிகளுக்கு 19.08 சதவீதம், மதிய காட்சிகளுக்கு 22.69 சதவீதம், மாலை காட்சிகளுக்கு 31.15 சதவீதம், இரவு காட்சிகளுக்கு 30.00 சதவீதம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் குறித்து இயக்குநர் எச். வினோத் விளக்கம் அளித்துள்ளார்.
என்டிடிவி (NDTV)-க்கு அளித்த பேட்டியில் “பெரும்பாலான விமர்சனங்களை நான் படிக்கவில்லை. அதோடு, எந்த விமர்சனம் பணம் கொடுத்து எழுதப்பட்டது, எது உண்மையான விமர்சனம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது பி.ஆர். கலாச்சாரமும், திட்டமிட்ட இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்கும் விமர்சனங்களிலும் தாக்கம் செலுத்துகின்றன. எனவே, உண்மையான விமர்சனம் எது என்பதை ஆராய வேண்டிய நிலை உள்ளது. உண்மையான கருத்துகளாக இருந்தால், அதை நான் நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன். முதல் நாளிலிருந்தே ‘ஜன நாயகன்’ ஒரு முழுமையான வணிக பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை நான் அறிந்திருந்தேன்.
இதற்கு ‘பகவந்த் கேசரி’ போன்ற ஒரு குறிப்பு திரைப்படமும் உள்ளது. எனவே, புதிய திரைப்படமாக மதிப்பிடுவதற்குப் பதிலாக, அந்த படத்துடன் ஒப்பிட்டு ‘ஜன நாயகன்’ எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு விமர்சிக்க வேண்டும். இன்றைய சூழலில் எந்த பத்திரிகையாளர் நேர்மையாக விமர்சனம் செய்கிறார் என்பதை கண்டறிவதே கடினமாகிவிட்டது. அதைப் பற்றி மன அழுத்தம் அடைய நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜு, பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
