புதுடில்லி: உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்திருப்பதால் மாநிலங்களுக்கான வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தை 20 சதவீதம் வரை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ஹோட்டல்கள் உணவகங்கள், பொது கேன்டீன்கள் பயன் பெறலாம். மேற்காசிய பிராந்தியத்தில் மூன்று வாரங்களை கடந்து இஸ்ரேல் – ஈரான் போர் நீடித்து வருகிறது. முதல் வாரத்தில் இருந்தே எரிவாயு வினியோக தொடரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.
மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால், தற்போது உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து, தட்டுப்பாடு நீங்கி, மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.
எனவே, வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் ஒதுக்கீட்டை கூடுதலாக 20 சதவீதம் வரை அதிகரிக்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, வணிக பயன்பாட்டு சமையல் சிலிண்டர் வினியோகம் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், உணவகங்கள், தொழிற்துறை கேன்டீன்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தங்கு தடையின்றி காஸ் சிலிண்டர் வினியோகத்தை உறுதி செய்யும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதே சமயம், கூடுதல் ஒதுக்கீட்டை பெற விரும்பும் ஹோட்டல், உணவகங்கள், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம் முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெறுவதற்கு கட்டாயம் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கான விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பீதியில் காஸ் சிலிண்டருக்கு பதிவு செய்வது மக்களிடையே குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க்குகளிலும் எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. எனவே, அவசரப்பட்டு முன்கூட்டியே எரிபொருளை வாங்கி சேமிக்க வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கள்ளச்சந்தையில் பதுக்கல்களை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் 3500 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 1400 சமையல் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகளும், மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு சமையல் சிலிண்டர் வினியோகம் கண்காணிக்கப்படுகிறது.
பாரசீக வளைகுடா கடல்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள 22 இந்திய கப்பல்களில் பணியாற்றும் 611 இந்திய மாலுமிகளும் பத்திரமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
