காஜியாபாத்: நாடு முழுதும் உள்ள ராணுவ முகாம்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை ரகசிய கேமரா வாயிலாக படம்பிடித்து, சிறப்பு செயலி வாயிலாக வெளிநாட்டினருக்கு அனுப்பி உளவு பார்க்க உதவிய ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட ஒன்பது பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் காஜியாபாத் மாவட்டம், கவுசாம்பியில் வசிக்கும் சிலர், நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை படம்பிடித்து, வெளிநாட்டு நபர்களுக்கு அனுப்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடந்த 15ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் மேலும் 11 பேருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்களைப் பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அந்த குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டது. தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் சந்தேகத்துக்கு உரியவர்களின், ‘மொபைல் போன்’கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, நம் அண்டை நாடான நேபாளத்தின் குல்மி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ், 20, பீஹாரின் புர்னியாவைச் சேர்ந்த விவேக், 18, உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த ககன் குமார் பிரஜபாதி, 22, ஜான்பூரைச் சேர்ந்த துர்கேஷ் நிஷாத், 26, மற்றும் ஐந்து சிறுவர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இது குறித்து காஜியாபாத் கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜ் கரண் நாயர் கூறியதாவது:
நம் நாட்டில் உள்ள ராணுவ தளங்கள், ரயில் நிலையங்கள் உட்பட முக்கிய இடங்களை படம்பிடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் கும்பலின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான சுஹைல் மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், தற்போது ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேட்டை
முக்கிய குற்றவாளிகளான பீஹாரைச் சேர்ந்த நவுஷத் அலி, பாஹல்பூரைச் சேர்ந்த சமீர் ஆகி யோரை தேடி வருகிறோம்.
கைதான கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் டில்லி கன்டோன்மென்ட் மற்றும் ஹரியானாவின் சோனிபட் ரயில் நிலையங்களில், சூரிய சக்தியில் செயல்படும் ரகசிய ‘சிசிடிவி’ கேமராக்களை பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அந்த கேமராக்களில் நேரடியாக பதிவாகும் காட்சிகளை, இதற்காக பிரத் யேகமாக பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் செயலி வாயிலாக வெளிநாடுகளில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு அவர்கள் அனுப்பியுள்ளனர்.
நாடு முழுதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட இந்த கும்பல் திட்டமிட்டிருந்தது.
மொபைல் போன் பழுது பார்க்கும் நிபுணர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள், சிசிடிவி ஆப்பரேட்டர்கள், கணினி தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றோரை குறி வைத்து, அவர்களுக்கு கூடுதல் பணம் வழங்குவதாக கூறி, வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் ரகசிய உளவு பணியில் அவர்களை ஈடுபடுத்திஉள்ளனர்.
கைதான நபர்கள் தங்கள் வீட்டு உறுப்பினர்களின் பயன்படுத்தப்படாத மொபைல் போன் சிம் கார்டுகளை வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கியதும், அவற்றை பயன்படுத்தி அங்கிருந்தபடியே, ‘வாட்ஸாப்’ கணக்குகளை அவர்கள் பயன்படுத்தி உளவு பார்த்ததும் தெரியவந்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான நிதி பரிவர்த்தனைகளும் ரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் என்பதால், மாநிலம் முழுதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
