கொளத்துார் தொகுதியில் ஓட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு!

சென்னை: கொளத்துார் தொகுதியில், ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்ததாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அளித்த புகாரையடுத்து, 14 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி துவங்கியது.

கடந்த சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், 8,795 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இதையடுத்து, சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்ததாக, ஸ்டாலின் தரப்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, கொளத்துார் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட ஒட்டுப்பதிவு இயந்திரங்கள், கருவிகள் செயல்பாடுகள் சரிபார்க்கும் பணி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் தொடங்கியது.

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சமீரன் முன்னிலையில் நடந்த சரிபார்ப்பு பணி நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும், தவெக சார்பில் வி.எஸ்.தீனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முதற்கட்டமாக, ஒன்று முதல் நான்கு வரையிலான ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும், ‘வி.வி.பேட்’ கருவிகளை அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்தனர்.

பதிவான ஓட்டுகள் சரிபார்க்கப்பட்டதுடன், மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டது. ‘பெல்’ நிறுவன பொறியாளர்களும் உடனிருந்தனர். தொடர்ந்து, ஸ்டாலின் சுட்டிக்காட்டிய மற்ற ஓட்டுச் சாவடிகளின் இயந்திரங்களும் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சமீரன் கூறியதாவது:

தினமும் இரண்டு ஓட்டுச்சாவடிகளின் இயந்திரங்கள் வீதம், ஏழு நாட்களில், 14 ஓட்டுச் சாவடிகளின் உள்ள இயந்திரங்கள் சரி பார்க்கப்படும். இந்த பணிகள் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடக்கும். சரி பார்ப்பு பணி முடிந்ததும் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு, தேர்தல் கமிஷனரிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link