சென்னை: “சிறுபான்மையினர் நலனுக்காக, மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பலனை, தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பெறுவதற்காக, தி.மு.க., அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை,” என, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.,வின் சிறுபான்மையினர் அணி சார்பில், கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் போதகர்களுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற கிறிஸ்துவ பாதிரியார்கள், ‘கிறிஸ்துவர்களின் மயான பூமியான கல்லறை தோட்டங்களுக்கு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’ என, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கூட்டத்தில் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
நாடு முழுதும் உள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை; சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உதவி என, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் நிதி வழங்குகிறது.
மேலும், சிறுபான்மையின மக்கள், சுய தொழில் துவங்க சிறப்பு கடனுதவி வழங்கப்படுகிறது.
அந்த திட்டங்கள், மாநில அரசுகள் வாயிலாக செயல்படுத்தப் படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கூட, சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை கேட்டு மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால், தமிழகத்தில் இருந்து, சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை கேட்டு, முன்மொழிவை தி.மு.க., அரசு அனுப்பியதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
