புதுச்சேரி: புதுச்சேரியில், 12 மணி நேரம் காத்திருந்தும் பேச்சு வார்த்தைக்கு வராத காங்., கட்சியினரால் கடுப்பான

புதுச்சேரி: புதுச்சேரியில், 12 மணி நேரம் காத்திருந்தும் பேச்சு வார்த்தைக்கு வராத காங்., கட்சியினரால் கடுப்பான தி.மு.க., பேச்சு வார்த்தை குழுவினர், கட்சி தலைமையில் தெரிவிக்க, நேற்று இரவு சென்னை புறப்பட்டு சென்றனர்.

புதுச்சேரியில் காங்., தி.மு.க., இடையே தொகுதி பங்கீடு இதுவரையில் முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காங்., கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு காலை 10:00 மணி முதல் அக்கார்டு ஓட்டலில் தி.மு.க., பேச்சு வார்த்தை குழுவினர், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர்கள் சிவா, நாஜிம், சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் காத்திருந்தனர்.

இரவு 8:45 மணி அளவில் காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் காங்., கட்சியினர் பேச்சு வார்த்தைக்கு வருவர் என இரவு 10:00 வரையில் காத்திருந்தும், காங்., கட்சியினர் வரவில்லை. இதனால் அதிர்ச்சியும், எரிச்சலும் அடைந்த தி.மு.க., பேச்சுவார்த்தை குழுவினர் உடனடியாக ஓட்டலில் இருந்து வெளியேறினர். இதுகுறித்து தி.மு.க., தலைமையிடம் தெரிவிக்க நேற்று இரவே சென்னை புறப்பட்டு சென்றனர்.

அப்போது, ஜெகத்ரட்சகன் கூறுகையில், ‘கூட்டணி பேச்சு வார்த்தைக்கு காங்., கட்சியினர் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம், ஆனால், இதைவிட அவர்களுக்கு ஏதோ முக்கியமான வேலை இருப்பதால் வரவில்லை என்று நினைக்கிறேன். இன்னும் 48 மணி நேரம் உள்ளது. அதனால் கூட்டணி பேச்சு வார்த்தை நாளை சென்னையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும்.

இப்போது நானும், புதுச்சேரி தி.மு.க, அமைப்பாளர் சிவாவும் வேறு வேலையாக சென்னைக்கு செல்கிறோம்’ என்றார். கூட்டணி பேச்சு வார்த்தைக்காக 12 மணி நேரம் தி.மு.க.,வினர் காத்திருந்தும், காங்.,கட்சியில் இருந்து ஒரு நிர்வாகிக்கூட அக்கார்டு ஓட்டல் பக்கம் எட்டிக்கூட பார்க்காதது, தி.மு.க.,வினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Source link