சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் படங்களுக்கு சான்று கிடையாது: தணிக்கை வாரியம் தகவல்

சென்னை: ‘சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது’ என, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

‘யுரேகா திரைப்படப் பள்ளி’ என்ற தயாரிப்பு நிறுவனம், ‘லட்சுமி லாரன்ஸ் காதல்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தணிக்கை சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், ‘சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது. சான்றிதழ் மறுக்கப்பட்டது ஒரு தனிப்பட்ட காட்சி அல்லது உரையாடலை அடிப்படையாகக் கொண்டது அல்ல. திரைப்படம், ஒட்டுமொத்தமாக சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரை தொடர்ந்து இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கிறது. பொது அமைதியை குலைத்து, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் தன்மை கொண்ட, சமூக அமைதியின்மையை துாண்டக்கூடிய படைப்புகளை கருத்து சுதந்திரம் என்று அனுமதிக்க முடியாது’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு, வரும் 11ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Source link