திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் வங்கி ஊழியரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா வன்னிமடை பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி (45), திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர், அதே பகுதியில் தங்கியுள்ளார். அங்கு சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.
இந்நிலையில், 6 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்டார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கணேசமூர்த்தியை பிடித்து தாக்கி, பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கணேசமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
