சென்னை: பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என ஹிந்து முன்னணி கட்சி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்த தமிழகம், சீரழிந்து போனதற்கு, தி.மு.க.,வின் திறனற்ற ஆட்சி தான் காரணம். சிறு கிராமங்களில் கூட, போதை பொருள் பாதிப்பு இருக்கிறது.
ராமநாதபுரத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், புகார் அளிக்க சென்றபோது, ஏழு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டது, இந்த ஆட்சியில், காவல்துறையின் மனிதாபிமானம் செத்து விட்டதை உறுதிப்படுத்துகிறது. விளாத்திகுளம் மாணவி கொலையிலும் இப்படித்தான் நடந்தது. காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல், பொதுமக்களின் புகார்களை உடனடியாக விசாரித்து, குற்றங்களை தடுக்க வேண்டும். இவ்வாறு காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.
