முதல்வர் முதல் அதிகாரிகள் வரை 6 மாதங்களுக்கு சம்பளம் 'கட்': ஹிமாச்சல் அரசு திடீர் முடிவு

சிம்லா: ஹிமாச்சல பிரதேச அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளதால், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் சம்பளத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த 2023 முதல், இயற்கை சீற்றங்களால் அம்மாநிலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் சம்பளத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விலக்கு

அதன்படி ஆறு மாதங்களுக்கு தன் சம்பளத்தை, 50 சதவீதம் வரை குறைக்க முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு முன்வந்துள்ளார்.’துணை முதல்வர், மாநில அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதமும், எம்.எல்.ஏ.,க்களின் சம்பளத்தில் 20 சதவீதமும் குறைக்கப்படும்’ என அவர் அறிவித்துள்ளார். இந்த சம்பள குறைப்பு உயரதிகாரிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை செயலர், காவல் துறை டி.ஜி.பி., கூடுதல் தலைமை செயலர்கள், ஏ.டி.ஜி.பி.,க்கள், முதன்மை செயலர்கள் மற்றும் மூத்த வனத்துறை அதிகாரிகளின் சம்பளம், 30 சதவீதம் வரை குறைக்கப்படும்.

துறை சார்ந்த தலைவர்கள், செயலர்கள், காவல் துறை ஐ.ஜி., – டி.ஐ.ஜி., – எஸ்.எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள் மற்றும் பிற வனத்துறை அதிகாரிகளின் சம்பளம் 20 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது.குரூப் — ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகளின் சம்பளம், அடுத்த ஆறு மாதங்களுக்கு 3 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. குரூப் – சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

முன்வர வேண்டும்

‘நீதித் துறையில் இருப்பவர்களும் தங்களது சம்பளத்தை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும்’ என மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் தங்களது சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், குரூப் – ஏ மற்றும் பி பிரிவு நீதித் துறை அதிகாரிகள் 3 சதவீதமும் சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சட்டசபையில் நான்காவது முறையாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்படி, 2025 – 26ம் நிதியாண்டுக்கு, 54,928 கோடி ரூபாய் மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி நெருக்கடியால் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த முறை 3,568 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள், பால் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றன. அதன்படி, பசும் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு, 51 ரூபாயில் இருந்து 61 ரூபாயாகவும், எருமை பால் லிட்டருக்கு, 61 ரூபாயில் இருந்து 71 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையிலும் பட்ஜெட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மஞ்சள் ஆதரவு விலை கிலோ, 90 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் முறையாக இஞ்சிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு, 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link