புதுடில்லி: மேற்காசியாவில் நடக்கும் போர் காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்க அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
மேற்காசியாவில் நடந்து வரும் மோதலால் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுக்கூட்டம் நடந்தது.
தற்போதைய சூழ்நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அனைத்து துறைகளும் எடுக்க திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலர் விரிவாக விளக்கம் அளித்தார்.
விவசாயம், ரசாயனம், உணவு பாதுகாப்பு, பெட்ரோலியம், எரிசக்தி ,ஏற்றுமதி, சிறு,குறு தொழில்துறையினர், கப்பல் , வர்த்தகம், விநியோக சங்கிலியில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேற்காசியாவில் நடக்கும் போரால் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் உலகளாவிய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும். அதில் இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க , உடனடியாக மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் , அனைத்து மின் நிலையங்களிலும் நிலக்கரி கையிருப்பு போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், மின்சாரப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ரசாயனம், மருந்து பொருட்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு தேவையானவற்றை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதிக்கான புதிய இலக்குகள் உருவாக்குவது என இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதை குறைக்க அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார். இதற்காக அமைச்சர்கள் குழுவும் மற்றும் துறைகளும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். அரசு குழுக்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை அல்லது பதுக்கப்படுவதை தவிர்க்க மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தற்போதைய சூழல் மாறி வருகிறது.
இதன் தாக்கம் ஏதோ ஒரு வடிவில் உலகம் முழுவதையும் பாதித்து வருகிறது. இத்தகைய சூழலில் , மோதலின் விளைவுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
