சென்னை: உதவி த்தொகை உயர்வு உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட, பார்வை மாற்றுத் திறனாளிகளை, போலீசார் கைது செய்து, 14 மணி நேரம் பஸ்சில் அடை த்து வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், ‘டெட்’ ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் குறைப்பு, உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டம் துவக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், நீதி மன்றத்தில் ஆஜர் செய்வதாகக் கூறி, நேற்று முன்தினம் இரவு முதல், தொடர்ந்து 14 மணி நேரம் பஸ்சில் அடைத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:
சென்னையில் நேற்று முன்தினம் காலையில் போராட்டத்தில் ஈடுபட்டோம்; இரவு காமராஜர் சாலையில் உள்ள ஆணையரக வளாகத்தில் தங்கினோம்.
இரவு, 10:00 மணி அளவில், நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக கூறி, எங்களை கைது செய்து, பஸ்சில் ஏற்றினர்; 44 பேர் இருந்தோம். ஆனால், நீதிமன்றம் செல்லாமல், கோயம்பேடு பஸ் நிலையம் சென்றனர். பின், போரூர் டோல்கேட் சென்று, அங்கேயே பஸ்சை நிறுத்தி, எங்களை உள்ளுக்குள் அடைத்து விட்டனர்.
எங்களில் நான்கு பேர் பெண்கள்; சிறுநீர் கழிக்க கூட அவர்களை அனுமதிக்கவில்லை. 14 மணி நேரம் பஸ்சில் தவித்தோம். பின், நேற்று மதியம் 1:00 மணிக்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே விடுவித்தனர்; ‘மீண்டும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது’ என, மிரட்டினர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
