ஏ.ஐ.,: உலகை முந்தும் இந்தியா 'டெலாய்ட்' ஆய்வில் தகவல்

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை ஏற்கும் விஷயத்தில், இந்திய நிறுவனங்கள் சர்வதேச போட்டியாளர்களை முந்தி வருவதாக ‘டெலாய்ட்’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அறிக்கை கூறுவதாவது:

பெரிய அளவில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை ஏற்று செயல்படுவதில், இந்திய நிறுவனங்கள் தமது சர்வதேச போட்டி நிறுவனங்களைவிட முன்னிலை வகிக்கின்றன.

இருப்பினும், ஏ.ஐ., நிபுணத்துவத்தைப் பொறுத்தவரை, உலக சராசரியைவிட இந்தியாவில் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தியாவில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை முழுமையாக அல்லது குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தும் நிறுவனங்கள் 40 சதவீதமாக உள்ளன. உலக சராசரி 28 சதவீதமாக உள்ளது.

மேலும், இந்தியாவில் 0 முதல் 4 சதவீத நிறுவனங்களே ஏ.ஐ.,யில் உயர்தர நிபுணத்துவத்துடன் உள்ளன. உலகளவில் இது 2 முதல் 8 சதவீதம் வரை உள்ளது. நாட்டிலுள்ள 94 சதவீத நிறுவனங்கள், அடுத்த ஆண்டில் ஏ.ஐ., முதலீட்டை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

ஏ.ஐ., பயன்பாட்டில், அரசின் ஒழுங்குமுறை மற்றும் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது 39 சதவீதம் பேருக்கு சவாலாக உள்ளது. அதேபோல், புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் தொழிலாளர்களும் நிர்வாகங்களும் தயக்கம் காட்டுவது 34 சதவீத தடையாக உள்ளது. இதற்கு மாறாக, ஏ.ஐ., பயன்பாட்டு செலவு 12 சதவீத அளவிலேயே தடையாக உள்ளது.

மேலும், கட்டமைப்பு வசதிகள் 5 சதவீதம் மட்டுமே தடையாக உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 97 சதவீதம் பேர், ஏ.ஐ., தொழில்நுட்பம் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, 200-க்கும் மேற்பட்ட தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் டெலாய்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.Image 1552611

Source link