சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது பாட்டு பாடி, வாக்காளர்களை கவர திட்டமிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாடல்களை பாடி பயிற்சி எடுத்து வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் இன்று வழிபாடு நடத்தி, தேர்தல் பிரசாரத்தை சீமான் துவக்குகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்காளர்களை கவர்வதற்காக, தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை மையப்படுத்தி, பல்வேறு பாடல்களை பாடி பயிற்சி எடுத்து வருகிறார்.
இன்று காலை 10:30 மணிக்கு, திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தும் சீமான், தானே எழுதிய முருகன் பாடலை பாடி வழிபடுகிறார். அப்போது, ‘வேலோடு வாடா என் முப்பாட்டன் முருகா; உன் தமிழோடு உன் பேரன் நான் வரேன்; வேலோடு வாடா என் முப்பாட்டன் முருகா’ என்ற பாடலை பாடி வழிபடுகிறார்.
அதன் பின், மாலை 4:30 மணிக்கு திருத்தணியில் தேர்தல் பிரசாரத்தை சீமான் துவக்குகிறார். பிரசாரத்தில், ‘மாத்தி மாத்தி ஓட்டு செலுத்தி வாழ்க்கை நிலை மாறலையே… என்ன சொல்லி ஏது சொல்லி மண்டையில ஏறலையே’ என்ற பாடல் உட்பட, பல்வேறு பாடல்களை பாட உள்ளார்.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், ‘ஆஹா எது டெவலப்பு, மொத்தமாவே மேக்கப்பு, கேள்வி கேட்டா உள்ளே வச்சு லாக் அப்பு’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
