திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் – காரணம் என்ன?

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமானது என்றும், அவரது பினாமி பெயரில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி (25 )  என்ற வாலிபர் கல்குவாரிக்கு அருகே சுற்றித்திரிந்த நிலையில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போனாதாக உறவினர்கள் தேடி வந்தனர். குவாரியில் இது குறித்து கேட்ட போது இளைஞர் இங்கே வரவில்லை என சொன்னதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று குவாரியில் எம் சாண்ட்  அள்ளும் பணியில் வடமாநில ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது எம் சாண்ட் கொட்டப்பட்ட  10அடி ஆழத்தில் காணாமல் போன கருப்பசாமி உடல் அழுகிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டது. இந்த தகவல் கிராமமக்களுக்கு தெரிந்ததை அடுத்து உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சக்கரா ப்ளூ மெட்டல் குவாரியை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்குவாரி

சம்பவ இடத்திற்கு வந்த ஊரக காவல் கண்காணிப்பாளர் சங்கர், நத்தம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நத்தம் அருகே குவாரிக்குள் வாலிபர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link