`காலையில் வந்தார்கள், மாலையில் முடிந்தது; ஆனால் திமுக!' – தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து கலந்து ஆலோசிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க மார்ச்.19 ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார்.

இவரைத் தொடர்ந்து அமமுக தலைவர் டிடிவி தினகரனும், பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருந்தனர்.

சென்னையில் பியூஸ் கோயல்…

இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று (மார்ச். 23) சென்னை வந்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை, டிடிவி தினகரன், அன்புமணி உள்ளிட்டோர் சென்னை அதிமுக அலுவலகத்தில் பியூஸ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

9 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி தினகரன் அதிமுக அலுவகலத்திற்கு வந்திருக்கிறார்.

தற்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக அலுவலகத்தில் தினகரன்....
அதிமுக அலுவலகத்தில் தினகரன்….

டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார்

தொகுதி பங்கீடு தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ” பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இன்று இரவுக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

நாங்கள் டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார். திட்டமிட்டு அவதூறு பரப்புவது ஸ்டாலினின் வாடிக்கையாக இருக்கிறது.

கருத்துக்களை பரிமாறவே டெல்லி செல்கிறோம். நாங்கள் டெல்லி செல்வதை விமர்சிக்கிறார்கள். அப்படி என்றால் கனிமொழி எதற்கு டெல்லி சென்றார்?

அதிமுக அலுவலகத்தில் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இது உணர்வுபூர்வமான கூட்டணி. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம். திமுக கூட்டணியில் 20 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

எங்கள் கூட்டணியில் காலையில் வந்தார்கள். மலையில் தொகுதி பங்கீடை அறிவித்துவிட்டோம். எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி. 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

Source link