டெஹ்ரான்: தற்காலிகமாக தாக்குதலை ஒத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், ஈரான்-அமெரிக்கா இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தொடுத்துள்ள போர், 4வது வாரத்தை எட்டி இருக்கிறது. போர் எப்போது ஓயும் என்று அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில், ஈரான் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மீது நடத்தப்படுவதாக இருந்த அனைத்து ராணுவ ரீதியான தாக்குதல்களை ஒத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் 2 நாட்களாக அமெரிக்கா, ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறி இருந்தார். டிரம்பின் இந்த அறிவிப்பு, தற்காலிக போர் நிறுத்தம் தான் என சர்வதேச ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம்பிடித்தன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விட்டதாக உலக நாடுகள் தரப்பில் கருதப்பட்டது.
இந் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாகவே அல்லது தாக்குதல் நிறுத்தப்படுவது தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை கூறியுள்ளதாவது;
தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ள சூழலில், டெஹ்ரான்-வாஷிங்டன் இடையே எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. டிரம்ப் கூறியதை நாங்கள் மறுக்கிறோம். எரிபொருள் விலையை குறைப்பது, ராணுவ ரீதியான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே டிரம்பின் நோக்கமாக இருக்கிறது.
எங்கள் இலக்குகளை போர் மூலம் அடையும் வரை எந்தவித பேச்சுவார்த்தையாக இருந்தாலும் அதை நிராகரிக்கும் நிலையில் தான் ஈரான் உள்ளது.
இவ்வாறு ஈரான் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
