ஹார்முஸ் ஜலசந்திக்கு 5,000 வீரர்களை அனுப்பியது அமெரிக்கா

வாஷிங்டன்: ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கவும், ஈரானின் முக்கிய எண்ணெய் வளங்களை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ள அமெரிக்கா, இதற்காக 5,000 கடற்படை வீரர்களை அனுப்பி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது போரின் மையப்புள்ளியாக ஹார்முஸ் ஜலசந்தி மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த ஜலசந்தியை மீட்கவும், ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் நடைபெறும் கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதற்காக, 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகள் அடங்கிய குழு, ஈரானை நோக்கி விரைந்துள்ளது. இதில் ஜப்பானை தளமாகக் கொண்ட 31வது கடற்படை மற்றும் சாண்டியாகோவின் 11வது கடற்படை பிரிவு வீரர்கள் உட்பட ஹெலிகாப்டர்கள், எப் – 35 போர் விமானங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுடன் கூடிய தரைப்படையினரும் அடங்குவர்.

வெறும் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கார் தீவை கைப்பற்றுவதன் வாயிலாக ஈரானின் பொருளாதாரத்தை முழுமையாக முடக்கி, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானை நிர்பந்திப்பதே இதன் நோக்கம் என கூறப்படுகிறது.

வான்வழி தாக்குதல்களால் மட்டும் இதற்கான பலன் கிடைக்காது என்பதால், தரைவழி தாக்குதல் நடவடிக்கை அவசியம் என அமெரிக்காவும், இஸ்ரேலும் கருதுகின்றன. இதற்காகவே இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Source link