சென்னை: தே.ஜ., கூட்டணியில், பா.ஜ.,வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகளை அ.தி.மு.க., ஒதுக்கியுள்ளது. த.மா.கா., உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.
-தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு கட்டங்களாக பேச்சு நடத்தினார்.
அதன்படி, கடந்த 19ம் தேதி டில்லி சென்ற பழனிசாமி, அமித் ஷாவை சந்தித்து பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார்.
யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்
அதன்படி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2:30 மணிக்கு பீயூஷ் கோயல் வந்தார்.
அவருடன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த தலைவர் தமிழிசை ஆகியோர் வந்தனர்.
தொடர்ந்து, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் வந்தனர்.
இதையடுத்து, யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை பழனிசாமி அறிவித்தார்.
எந்த கட்சிக்கு எந்த தொகுதி
பழனிசாமி அளித்த பேட்டி:
எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமுகமாக நடந்தது. அதன்படி, பா.ஜ.,வுக்கு 27 தொகுதி களும், பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. இரவுக்குள் பேச்சு முடிந்து, அந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிப்போம்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவர்களது கூட்டணி கட்சி தலைவர்களும், எங்கள் கூட்டணியை பற்றி விமர்சனம் செய்கின்றனர்.
தே.ஜ., கூட்டணி உணர்வுப்பூர்வமான வெற்றி கூட்டணி. வரும் தேர்தலில், 210 இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெறும்; அதிக இடங்களில் வென்று, அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும்.
எங்களுடைய கருத்து பரிமாற்றத்துக்காக டில்லி செல்கிறோம். நாங்கள் டில்லிக்கு சென்றால், ஸ்டாலினுக்கு பயம் வந்து விடுகிறது; அவதுாறு பரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
இன்று நாங்கள் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி உள்ளோம். காலையில் தான் பீயூஷ் கோயல் வந்தார். அவருடன் பேச்சு நடத்தி, மதியம் அறிவித்துள்ளோம்.
எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிப்போம். ஆனால், 20 நாட்களாக தி.மு.க., கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.
மக்கள் விரோத தி.மு.க.,வை அகற்ற வேண்டும் என்பதற்காக ஒன்று சேர்ந்துள்ளோம். தினகரன் இன்று அ.தி.மு.க., அலுவலகம் வந்துள்ளார்; எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை.
எமர்ஜென்சி, மிசா கொண்டு வந்த காங்கிரசோடு தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்னும் இழுபறி நீடிக்கிறது. அது தான் பொருந்தாத கூட்டணி. நாங்கள் தொகுதி பங்கீட்டை அறிவித்து விட்டோம். ஆனால், தி.மு.க.,வால் முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போது தொகுதி பங்கீட்டில் 56 தொகுதிகள் போக, அ.தி.மு.க., கையில் 178 தொகுதிகள் உள்ளன. இவற்றில், வாசன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஜெகன் மூர்த்தி, ஏ.சி.சண்முகம் ஆகியோருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து, பழனிசாமி தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.
