மதுரை: ‘தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பவே மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கிறது’ என்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: 525 தேர்தல் வாக்குறுதிகளில் 200ஐக்கூட நிறைவேற்றாதது தி.மு.க., அரசு. இப்படி ஏமாற்றும் திறன் தி.மு.க.,வுக்கு மட்டும்தான் உண்டு.
தமிழக பட்ஜெட்டில் திருப்பரங்குன்றத்திற்கு மதுரைக்கு என்றா நிதி ஒதுக்குகிறார்கள். பொதுவாகத்தானே ஒதுக்குகிறார்கள். அதுபோலத்தான் மத்திய பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை துவங்கவில்லை என்று தற்போதுள்ள துணை முதல்வர் ஒரு செங்கலை காட்டினார்.
ஆனால் பல லட்சம் செங்கலுடன் இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை எழுந்து நிற்கிறது. அதை நினைவுபடுத்தவும், தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பவும் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டிய அதே இடத்தில் பிரதமர் பங்கேற்கும் கூட்டம் நடக்க உள்ளது.
காங்கிரஸ் தனியாக நிற்க தயாராக உள்ளதா. எப்படியாவது விஜய்கூட சேர்ந்துவிடலாம் என்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதுமுடியாமல் திரும்பவும் தி.மு.க., கூட்டணியில் உள்ளனர். அவர்கள் கூட்டணிதான் பொருந்தா கூட்டணி.
அ.தி.மு.க.,வை விமர்சனம் செய்ய விஜய்க்கு என்ன தகுதி உள்ளது. ஒரு கவுன்சிலர்கூட ஆகவில்லை.
தமிழை வைத்து பிச்சைகூட எடுக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் பார்லிமென்டில் பேசியதாக கமல் பேசியுள்ளார். ஈ.வெ.ராமசாமி அன்று பேசியதைத்தானே அமைச்சர் பேசினார். அது நிதியமைச்சரின் கருத்தல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் விமான கும்பாபிஷேக யாகசாலை பூஜையை தரிசிக்க வந்த நயினார் நாகேந்திரன் கூறியது:
மடப்புரம் அஜித்குமார் மரணம் உட்பட தி.மு.க., ஆட்சியில் 32க்கும் மேலான இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விட்டன. ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கவி கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால் இன்று ‘கஞ்சா நிறைந்த’ தமிழ்நாடாக்கி விட்டார்கள். கத்தி,அரிவாளோடு பள்ளிக்கு மாணவன் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஹிந்தியை நாங்கள் திணித்ததில்லை. பல மொழிகளும் தெரிந்திருந்தால் நல்லது. மொழியை வைத்து அரசியல் நடத்துவது நல்லதல்ல.
தமிழக ரயில்வேக்கு ரூ.7300 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தியா முழுவதும் மாவட்டந்தோறும் மகளிர் விடுதி துவங்கப்பட உள்ளது.
40 ஆயிரம் கோடியில் செமி கன்டக்டர், 10 ஆயிரம் கோடிக்கு மேல் மருத்துவத்துறைக்கு. அதில் ஆயுர்வேதத்துறை.
ஆயுர்வேத மருத்துவம் தமிழ்நாட்டில் தான் உள்ளது.
திருச்சி விமான நிலையம் 650 கோடி, தூத்துக்குடி விமான நிலையம் 350 கோடி இதெல்லாம் தமிழ்நாட்டிற்கு தானே கொடுத்துள்ளார்கள். தி.மு.க.,வினர் கோயபல்ஸ் பிரசாரம் செய்கின்றனர்.
கனிம வளத்தை கொள்ளையடிப்பதே தி.மு.க.,தான். திருநெல்வேலி,திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் கனிம வளத்தை கொள்ளையடித்து கேரளா கொண்டு போகின்றனர். கேரளாவிலிருந்து மருந்து கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
