நமது நிருபர்
நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் மெலோனி தோல்வியை தழுவினார். எனினும் நாட்டின் பிரதமராகத் தொடர்வதாக உறுதியளித்துள்ளார்.
இத்தாலியில் நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பு மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பணிக்காலப் பிரிவினை உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் குறித்து வாக்காளர்களின் கருத்தைக் கேட்பதற்கு நடத்தப்பட்டது.
எதிர்பார்த்ததை விட 58 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுப்பதிவானது. அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு (46.5%), எதிர்ப்பு (53.5%) என ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பான அரசியலமைப்பு பொது வாக்கெடுப்பில் தோல்வியை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
இத்தாலியர்கள் முடிவெடுத்துவிட்டனர். நாங்கள் இந்த முடிவை மதிக்கிறோம். இந்த பொது வாக்கெடுப்பின் முடிவு இத்தாலியை நவீனமயமாக்குவதற்கான ஒரு நழுவிய வாய்ப்பு என கருதுகிறேன். தேசத்தின் நலனுக்காகத் தீவிரத்துடனும் உறுதியுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன்.
இந்த முடிவுகள் எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளில் மாற்றத்தை கொண்டு வராது. நடுநிலையை உறுதி செய்வதற்கும், இத்தாலியின் சீர்குலைந்த நீதி அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் தற்போதைய நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகும். இவ்வாறு ஜார்ஜியா மெலோனி கூறினார்.
