புதுடில்லி: ஐக்கிய அரபு அமீரக சிறையில் இருக்கும் தன் சகோதரரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு நடிகை செலினா ஜெட்லி கோரிக்கை விடுத்துள்ளார்.இந்திய ராணுவத்தின் சிறப்புப் படையில் அதிகாரியாகப் பணியாற்றிய விக்ராந்த் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவர், வர்த்தகம் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் மட்டிடி குரூப் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணமோ, குற்றச்சாட்டோ இதுவரை ஏதும் தெளிவாக சொல்லப்படவில்லை.
இதனிடையே, விக்ராந்த் கைது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் அவரது சகோதரியான நடிகை செலினா ஜெட்லி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில், தனது சகோதரர் விக்ராந்த் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு சட்ட நிறுவனத்தை நியமிக்க அனுமதி அளித்த டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 10ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், 18 மாதங்களாக யுஏஇ அதிகாரிகளின் பிடியில் இருக்கும் அவரை, மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நடிகை செலினா ஜெட்லி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; நமது நாட்டின் ஒரு வீரர் வெளிநாட்டுச் சிறையில் எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ளார். சட்ட உதவியை தாமதப்படுத்துவது ஏன்? சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரரை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர் தன்னுடைய முழு இளமைக் காலத்தையும் நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார். அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால், இந்நேரம் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கும். இக்கட்டான சூழலில், ராணுவ வீரர்களுக்கு பின்னால், நாடே நிற்க வேண்டும், என்று கூறினார்.
