புதுடில்லி: ” அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், மேற்காசியா போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கவலை
மேற்காசியா போர் தொடர்பாக ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்காசிய போர், தீவிர எரிசக்தி பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் வேலை செய்கின்றனர். பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது இந்தியாவுக்கு பெரிய கவலையாக உள்ளது.
இந்த போர் துவங்கி 3 வாரங்கள் ஆகின்றன. எரிசக்தி துறையில் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலை இந்தியாவுக்கும் கவலை அளிக்கிறது. வர்த்தக பாதைகளுக்கும் இந்தப் போர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், காஸ் மற்றும் உரங்களின் வழக்கமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை
பல நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் கடக்க முடியாமல் உள்ளது. அதில் பல இந்திய மாலுமிகள் உள்ளனர். இதுவும் இந்தியாவுக்கு கவலையளிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகத்திற்கும் அமைதி மற்றும் பேச்சுவார்த்தை என்ற ஒருமித்த குரல் இந்த அவையில் இருந்து வர வேண்டும். போரை துவங்கியது முதல், மேற்காசியாவில் உள்ள நாட்டு தலைவர்களுடன் இரண்டு முறை பேசியுள்ளேன்.
முயற்சி
ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட சர்வதேச கடல் பாதைகள் வழியாக வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், அதற்கு தடை விதிக்கப்படுவதற்கும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்பாவி மக்கள், சிவில் உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஏற்க முடியாது. போர் காலத்திலும் இந்திய கப்பல்கள் பாதுகாப்பாக கடப்பதை உறுதி செய்ய இந்தியா முயற்சித்து வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பேச்சுவார்த்தை நடத்துவதை இந்தியா விரும்புகிறது. இந்த போரில் யாரின் வாழ்க்கைக்கும் மிரட்டல் விடுவது மனிதநேயத்திற்கு எதிரானது.
தன்னிறைவு
அனைத்து பிரச்னைகளையும் அமைதியான முறையில் தீர்வு காண அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு வைத்துள்ளோம். 65 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு வைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம். போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.
பேச்சுவார்த்தை
மேற்காசிய போர், உலக பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலமாகும். இந்த போரினால்,நமது நாட்டிற்கு ஏற்படும் தாக்கத்தை குறைக்க பணியாற்றி வருகிறோம். இந்தியர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நாடுகளும் உறுதியளித்துள்ளன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்துள்ளனர். இது போன்ற சூழ்நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு தேவையான உதவி செய்யப்பட்டுள்ளன.
அனைத்து சூழ்நிலைகளிலும் விவசாயிகளுடன் அரசு துணை நிற்கும் என உறுதியளிக்கிறேன்.போதுமான அளவு உரம் கையிருப்பு இருப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொளளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
