ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம் இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரானும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் சம்பவங்கள் இன்று வரை முடிவடையாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த 24 நாட்களாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, இந்த போரால் ஏற்பட்டுள்ள உலக சந்தையில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் கடுமையான விலை உயர்வு போன்ற நிகழ்வுகள் உலக பொருளாதாரத்தைப் பெரிதளவில் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே சமயத்தில், இந்த தாக்குதல் சம்பவங்களால் சம்பந்தப்பட்ட நாடுகளில் உயிர் இழப்பும், பொருளாதார பேரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், இந்த போரை நிறுத்தும் படி பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தது வருகின்றன. அந்த வகையில், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, ஈரானைத் தாக்க தங்களது ராணுவ தளங்களை வழங்குமாறு அமெரிக்கா ஸ்பெயின் அரசிடம் கோரிக்கை விடுத்தது.
ஆனால், அமெரிக்காவின் இந்த கோரிக்கையை ஸ்பெயின் அரசு ஏற்க மறுத்தது. இதன் காரணமாக, ஸ்பெயினுடனான வர்த்தக உறவை அமெரிக்கா துண்டிப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த போருக்கு எதிராக ஸ்பெயின் அதிபர் “பெட்ரோ சான்செஸ்” கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஈரான் ராணுவம் சான்செஸின் படம் மற்றும் போருக்கு எதிராக அவர் கூறிய வாசகங்களை ஆங்கிலம் மற்றும் பாரசீக மொழிகளில் அச்சிட்டு, ஏவுகணைகளில் ஒட்டி இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
அதாவது, “நிச்சயமாக, இந்த போர் சட்டவிரோதமானது மட்டுமல்ல. மனித நேயமற்றது. நன்றி பிரதமர்” போன்ற வாசகங்களை ஏவுகணைகள் மீது ஒட்டி இஸ்ரேல் மீது ஈரான் வீசியுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
