”இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் 15 ஆண்டுகளிலும், இயற்கை எரிவாயு 17 ஆண்டுகளிலும் தீர்ந்துவிடும்” என்று வி.சி.க. எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத் துறை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்திருக்கிறார்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் கச்சா எண்ணெய் கிடைக்கும் ?
நாடாளுமன்றத்தின் 2026-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று பிப்ரவரி 5-ம் தேதி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் ரவிக்குமார், பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு குறித்து கீழ்வரும் கேள்விகளை எழுப்பினார்.
“நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள் வளங்கள் எத்தனை ஆண்டுகளில் தீர்ந்துவிடும் என மதிப்பிடுவதற்காக அரசு ஏதேனும் ஆய்வு அல்லது மதிப்பீடு மேற்கொண்டுள்ளதா?
அவ்வாறு மேற்கொண்டிருந்தால், அந்த ஆய்வின் விவரங்களையும் எரிபொருள் வாரியாகக் கிடைத்த முடிவுகளையும் தெரிவிக்கவும்.

அவ்வாறு எரிபொருள் வளங்கள் குறைந்து வருவதால் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஆற்றல் பாதுகாப்புக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு அறிந்துள்ளதா?
மேலும் எரிபொருள் வளங்கள் தீர்ந்து வருவதை நிர்வகிக்க அல்லது அதன் பாதிப்புகளைக் குறைக்க மாற்று உத்திகள் அல்லது கொள்கைகளை அரசு உருவாக்கியுள்ளதா அல்லது உருவாக்கத் திட்டமிட்டுள்ளதா? அவ்வாறு இருந்தால் அதன் விவரங்களைத் தெரிவிக்கவும்”‘ என்று கேள்வி எழுப்பினார்.
எரிபொருள் அலாரம்… கையில் இருப்பது 15 ஆண்டுகள்தான்!
அதற்குப் பதிலளித்த பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, “மத்திய ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (Directorate General of Hydrocarbons) வழங்கிய தகவலின்படி, 2025 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி இந்தியாவின் எரிபொருள் கையிருப்பு விகிதம் (R/P ratio) கணக்கிடப்பட்டுள்ளது.
நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் இருப்பு நிலை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையான PRMS (Petroleum Reserve Management System) முறையின் அடிப்படையில் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது.
அதன்படி 2025 ஏப்ரல் 1-ம் தேதியிலான PRMS நிலவரத்தின்படி, நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கான இருப்பு, உற்பத்தி விகிதம் (Reserve/Production Ratio – R/P Ratio) முறையே சுமார் 15 ஆண்டுகள் மற்றும் 17 ஆண்டுகள்.

R/P விகிதம் என்பது தற்போதைய எரிபொருள் பயன்பாட்டு வேகம் மாறாமல், தற்போதைய பயன்பாட்டு வேகத்திலேயே சென்றால், இந்தியாவில் தற்போது கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய் இன்னும் சுமார் 15 ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும்.
இயற்கை எரிவாயுவின் கையிருப்பு இன்னும் 17 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஹைட்ரோகார்பன் தேடுதல் என்பது ஒரு தொடர் பணி என்பதால், புதிய எண்ணெய் கிணறுகள் கண்டறியப்படும்போது இந்தக் கால அளவு அதிகரிக்கக்கூடும்.
`இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாது…’
பெட்ரோல் போன்ற உயிர் எரிபொருட்கள் படிப்படியாகக் குறைக்கப்படும் நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிக ஆரம்ப முதலீடு தேவைப்படுதல், சூரிய, காற்று மற்றும் உயிர் ஆற்றல் போன்ற உள்நாட்டுப் புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு மாறுதல் போன்றவை பொருளாதாரத்துக்கும் ஆற்றல் பாதுகாப்புக்கும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை அரசு உணர்ந்துள்ளது.
ஆற்றல் கலவையில் இயற்கை எரிவாயு, உயிரி எரிபொருட்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிக்க அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் கீழ், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) சூரிய ஒளி, காற்று மற்றும் உயிரி எரிசக்தி (Bioenergy) ஆகியவற்றில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

கலப்பு எரிபொருள் திட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க, பெட்ரோலில் ‘எத்தனால்’ (Ethanol) மற்றும் டீசலில் ‘பயோ-டீசல்’ கலப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எரிசக்தித் துறையில் சுயசார்பை அடைய, ஆண்டுக்குக் குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன் (5 MMT) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிக்கவும், நாடு முழுவதும் மாற்று எரிபொருள் நிலையங்கள் (Alternate Fuel Stations) மற்றும் சார்ஜிங் மையங்களை நிறுவவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில், ‘எரிசக்திப் பாதுகாப்பு’ (Energy Security) உறுதி செய்யப்படும்” என்றார்.
