ஆயுதப்படைகளில் பெண்களுக்கு பாகுபாடு கூடாது: நிரந்தர பணி, ஓய்வூதியத்தை உறுதி செய்தது கோர்ட்

– டில்லி சிறப்பு நிருபர் –

‘ஆயுதப்படைகளில் பெண் அதிகாரிகளின் தகுதியை மதிப்பிடும் முறை பாரபட்சமாக இருக்கிறது. அவர்களுக்கும் நிரந்தர பணி, 20 ஆண்டு கால பணிக்கான ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதிய பலன்

ஆயுதப்படைகளில், குறுகிய கால சேவை ஆணையத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கு அதிகாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர். இது, 14 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம். இதன்பின், நிரந்தர பணி ஆணையத்தின் கீழ் பணி வழங்காவிட்டால், அவர்கள் பணியிலிருந்து வெளியேற வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்காது.

அதுவே, நிரந்தர பணி ஆணையத்தின் கீழ் நியமிக்கப்படும் அதிகாரிகள் ஓய்வு பெறும் வரை பணியாற்றலாம். இவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதோடு பதவி உயர்வும் கிடைக்கும். நிரந்தர பணி ஆணையத்தில் பெரும்பாலும் ஆண் அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் அதிகாரிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் உஜ்ஜல் புயான், என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆண் அதிகாரிகள் இனி ராணுவத்தின் நிரந்தர பணியிடங்கள் தங்களுக்கு மட்டுமே உரித்தானது என, எதிர்பார்க்க முடியாது.

நிரந்தர பணி

பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி மறுக்கப்பட்டது, மதிப்பீட்டு முறையில் ஊடுருவியிருந்த பாகுபாட்டின் விளைவு. பெண் அதிகாரிகளின் ஆண்டு ரகசிய அறிக்கைகள் முறையான கவனமின்றி மிக சாதாரணமாக மதிப் பிடப்பட்டு உள்ளன. இவர்கள் ஒருபோதும் நிரந்தர பணிக்கு தகுதியடைய மாட்டார்கள் என்ற முன்கூட்டிய அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. இது அவர்களின் ஒட்டுமொத்த தகுதியை பாதித்தது.

நிரந்தர பணிக்கு தகுதியுள்ள பெண் அதிகாரிகள், 20 ஆண்டுகள் தகுதியான சேவையை முடித்தவர்களாக கருதப்படுவர். இதன் மூலம் அவர் களுக்கு ஓய்வூதியம் மற்றும் அனைத்து பலன்களும் கிடைக்கும். ஏற்கனவே தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தும். எனினும், 2019, 2020, 2021-ல் நடத்தப்பட்ட தேர்வு வாரியங்கள் மூலம் வழங்கப்பட்ட நிரந்தர பணிகள் மாற்றப்படாது.

ஆண்டுக்கு, 250 பெண்களுக்கு மட்டுமே நிரந்தர பணி என்ற உச்ச வரம்பு தன்னிச்சையானது; சட்டவிரோதமானது. இதை நாங்கள் ரத்து செய்கிறோம். அரசியலமைப்பின், 142-வது பிரிவின் கீழ் நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, இந்த உத்தரவை பிறப்பிக்கிறோம். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link