புதுடில்லி: நாட்டின் எல்.பி.ஜி., இறக்குமதி சார்பை குறைக்க, எத்தனாலை சமையல் செய்வதற்கான எரிபொருளாக உருவாக்க வேண்டும் என்று பெட்ரோலிய துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அகில இந்திய எத்தனால் உற்பத்தியாளர் சங்க மாநாட்டில், பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ரவி பேசியதாவது: எல்.பி.ஜி., சாதன ஆய்வு மையம் மற்றும் பல்வேறு ஐ.ஐ.டி., நிறுவனங்கள் ஆகியவை எத்தனாலை எரிபொருளாக கொண்ட சமையல் அடுப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த அடுப்புகளின் மாதிரிகள் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையலுக்கு எத்தனால் பயன்பாடு நடைமுறைக்கு வந்துவிட்டால் சமையல் எரிவாயு இறக்குமதியை சார்ந்திருப்பது குறைந்துவிடும். எத்தனால் உற்பத்தித்துறை, இதற்கான அடுப்பு தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல, ஒவ்வொரு வீட்டுக்கும் எத்தனால் எரிபொருள் வினியோக தொடரை கட்டுபடியாகக்கூடிய செலவில் உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது, இத்துறையினர் கணிசமான அளவில் எத்தனாலை உற்பத்தி செய்து, பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றனர். இதில் மாற்றம் தேவை. எத்தனாலை நாடு தழுவிய சமையல் எரிபொருளாக மாற்றும் முயற்சியில் எத்தனால் உற்பத்தியாளர்களின் ஆலோசனைகள் எங்களுக்கு தேவை.
டீசலிலும் எத்தனால், கலப்பதற்கான ஐசோபியூட்டனால் உற்பத்தியை அதிகரிக்கவும், விமானங்களுக்கான நீடித்த எரிபொருளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எத்தனால் தயாரிப்பு துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
