Vijay: 'புலி' பட வருமானத்தை மறைத்த வழக்கு; விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

நடிகர் விஜய் புலி படத்தின் சம்பளத்தை மறைத்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.

'புலி' படத்தில் விஜய்

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை 2015-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் மதிப்பீட்டு ஆய்வு மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகளால் நடிகர் விஜய், “புலி’ படத்துக்காக வாங்கிய சம்பளம் ரூ.15 கோடியை மறைத்து கணக்கு காண்பித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வருமானத்தை மறைத்த நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. வருமானவரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விஜய்
விஜய்

அதில்,“வரி அபராதத்தை 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். கால தாமதமாக, சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது சட்டப்படி தவறு” என வாதிட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அதில், “வருமான வரித்துறை அபராதம் விதித்ததில் எந்த விதிமீறலும் இல்லை. எனவே, வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link