டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழிந்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியின் கூட்டு நிர்வாகம் குறித்து, அமெரிக்க

டெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழிந்ததுடன், ஹார்முஸ் ஜலசந்தியின் கூட்டு நிர்வாகம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்த கருத்தை ஈரான் கேலி செய்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அணுசக்தி காரணங்களுக்காக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28ம் தேதி முதல் போர் தொடுத்து வருகின்றன.

மூன்று வாரங்களை கடந்து போர் தொடரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய முனையமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.

இதனால், உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது.

இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட, 48 மணி நேர கெடு விதித்தார் டிரம்ப்.

இந்நிலையில், ஈரானுடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த டிரம்ப், அடுத்த 5 நாட்களுக்கு ஈரான் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது என நேற்று முன்தினம் கூறினார்.

டிரம்பின் கருத்தை மறுத்துள்ள ஈரான், பேச்சு ஏதும் நடத்தவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நேற்றும் ஈரான் நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ், ஹைபா, ஈலாட் மற்றும் டிமோனா அணுசக்தி மையம் அமைந்துள்ள பகுதிகளை இலக்காக கொண்டு பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் ஏவியது.

இஸ்ரேலும் பதிலுக்கு ஈரானின் முக்கிய இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் உறுதியாக இருப்பதாகவும், ஆனால், புதிய சுற்று பேச்சில் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை எனவும் பெயர் வெளியிட விரும்பாத மூன்று மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதற்கான டிரம்பின் முயற்சி குறித்து விவாதிக்க, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தை கூட்டுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மத்தியஸ்தம் செய்ய பாக்., ஆர்வம்!
ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் முயன்று வருவதாகவும், அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஷியா முஸ்லிம் மக்கள் தொகையை பாகிஸ்தான் கொண்டுள்ளது. மேலும், கடந்தாண்டு சவுதி அரேபியாவுடன் கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட வளைகுடா நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை பாகிஸ்தான் பேணி வருகிறது. இதுவரை, ஈரான் மீதான தாக்குதல்களை கண்டிப்பதன் வாயிலாக, எச்சரிக்கையான ராஜதந்திரத்தை கடைப்பிடித்து வந்தது. ஆனால், அதேவேளையில் பதற்றத்தை தணிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான கருத்து வேறுபாடுகளை தீர்க்க, பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சு நடத்துவதற்கு நடுநிலையான இடமாக இஸ்லாமாபாதை பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, பாகிஸ்தான் முப்படைகளின் தளபதி அசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் சமீபத்தில் தொலைபேசியில் பேசியதாகவும், ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பலமுறை தொலைபேசி வாயிலாக பேசி போரை தவிர்க்குமாறு வலியுறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கேள்வி!
பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவதாக வெளிவரும் செய்திகள், இந்தியாவுக்கு கிடைத்த பலத்த பின்னடைவு என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் பல உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொண்ட போதிலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய வட்டாரத்துடன், நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதன் வாயிலாக, மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்க தலைமைக்கும், பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கும் இடையேயான சந்திப்புகளே இதற்கு உதாரணம். ‘ஆப்பரேஷன் சிந்துார்’ வாயிலாக இந்தியா, ராணுவ ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் ராஜதந்திர ஈடுபாடும், செய்திகளை கையாளும் விதமும் தற்போதைய இந்திய அரசின் முயற்சியைவிட மிகவும் சிறப்பாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கட்டிப்பிடி ராஜதந்திரம் தற்போது படுதோல்வி அடைந்துள்ளது. தவறான வெளியுறவு கொள்கை தேர்வுக்கான விலையை நாடு இப்போது கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போருக்கு காரணம் யார்?
டிரம்ப் புதிய விளக்கம் ஈரானுக்கு எதிராக போர் தொடுக்கும் ஆலோசனையை ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் வழங்கியதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது டிரம்ப் கூறியுள்ளதாவது: ஈரான் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினேன். அதில் ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது; அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையில் உள்ளது குறித்து நான் கூறினேன். மேற்காசியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள ஈரான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டேன். அப்போது, அவர்களுக்கு அணுசக்தி கிடைக்கக் கூடாது; தாக்கி அழிக்கலாம் என்று ஹெக்செத் கூறினார். அதன்பிறகே, தாக்குதலை துவக்கினோம். இவ்வாறு அவர் கூறினார். அதே நேரத்தில், தற்போது பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, ஈரானுடன் ஹெக்செத் பேசி வருவதாகவும், அதற்கு பலன் கிடைத்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

விரைவில் ஒப்பந்தம் : டிரம்ப்
ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி அமெரிக்காவுடன் பேச்சு நடத்தவும், ஒப்பந்தம் செய்து கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, ஈரான் இடையே நாள் முழுதும் பேச்சு நடந்ததாகவும், அப்பேச்சில் உடன்பாட்டுக்கான முக்கிய கருத்துக்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இது போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விரைவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source link