சென்னை: கூட்டணியில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, திமுக. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி

சென்னை: கூட்டணியில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, திமுக. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது கடிதம்: தேர்தல் களத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகளை உரிமையுடன் கேட்பதும், அவற்றைப் பரிசீலித்து எந்தளவுக்கு வழங்க முடியுமோ அவற்றை வழங்குவதும் கூட்டணிக்கான நடைமுறையாகும். அதனை ஜனநாயகத் தன்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் திமுகவுக்கு தோளோடு தோள் நிற்பவை கூட்டணி கட்சிகள்.

தவிடுபொடி

மதச்சார்பின்மை, மாநில உரிமை, சமூகநீதி, சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணிதான் நம்முடையது. கூட்டணியில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, திமுக. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கிறார்கள். திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை திமுகவினர் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, கூட்டணி கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நம்பிக்கை

கட்சியினர் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழக மக்களிடமும் திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் போக, திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.

வெல்வோம்

உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழகத்தை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Source link