“த.வெ.க-வுடன் தனி அணி; `போட்டி' காங்கிரஸுக்கு 20 சீட்!” – காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த கலகக்குரல்!

தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இப்போது தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததற்காக காங்கிரஸ் கட்சியில் சத்தமில்லாமல் ஒரு டீம் வெளியேற தயாராகி வருகிறது என்பது பரபர ஹாட் டாபிக் ஆக அரசியல் வட்டாரத்தில் பரபரக்கிறது.

சென்னை எழும்பூரில் த.வெ.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய த.வெ.க தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் தி.மு.கவுடன் கூட்டணியை விரும்பவில்லை. எங்கள் கட்சி அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வந்துக்கொண்டுள்ளார்கள்” என்று பேசினார்.

இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் புயலை ஏற்படுத்தியது. தி.மு.க-வுடன் தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யார் த.வெ.கவுடன் தொடர்பில் இருந்தது என்கிற விவரங்கள் தேடியது காங்கிரஸ் தலைமை. 

ஆதவ் அர்ஜுனா

இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக உள்ள டி.செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுள்ள மாநில காங்கிரஸ் தலைமை. த.வெ.க தரப்புடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாலே இந்த முடிவை எடுத்திருப்பதாக காங்கிரஸார் சொல்கிறார்கள். அதேநேரம் செல்வம் மட்டும் த.வெ.கவுடன் பேசவில்லை மேலும் சிலரும் கட்சிமாறும் யோசனையில் இருக்கிறார்கள் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

“த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தால் பலருக்கு சீட் கிடைக்கும் என்கிற கனவில் இருந்தனர் சிலர். ஆனால் தி.மு.கவுடன் கூட்டணி போனதால் இப்போது தங்களுக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்காது என்பதால் அவர்கள் தனியாக த.வெ.கவுடன் ஆலோசனை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடந்து வந்தது. செல்வம் மட்டுமல்ல, மாநில துணைத் தலைவராக உள்ள ஒருவரும், மாநில நிர்வாகத்தில் உள்ள மேலும் மூவரும் கடந்த ஒரு வாரமாக நந்தனத்தில் உள்ள த.வெ.க தேர்தல் அலுவலவத்தில் தான் முழுநேரமும் இருந்துவருகிறார்கள். 

இவர்கள் அங்கிருக்கும் போதே எங்களுக்கும் தகவல் வந்துவிட்டது. குறிப்பாக செல்வம், கடந்த இரண்டு நாட்களாக வடமாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைவர்களுக்கு போன் செய்து “நீங்க வாங்க.. நாம போட்டி காங்கிரஸ் கட்சியை அமைத்து த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கலாம்” என்று பேசியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா - விஜய்
ஆதவ் அர்ஜுனா – விஜய்

இவர் பேச்சை கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்பாக முப்பது நிர்வாகிகள் த.வெ.க அலுவலகத்திற்கு படையெடுத்து சென்றார்கள். அவர்கள் விவரமும் எங்களிடம் இருக்கிறது. தற்போது செல்வம் தலைமையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு முப்பது சீட் வேணும் என்று த.வெ.க-வுடன் பேச்சு நடந்துவருகிறது” என்கிறார்கள். 

இந்நிலையில் த.வெ.க தரப்பு இதையே உறுதி செய்கிறது. ஆதவ் அர்ஜூனா சும்மா ஒன்றும் பேசவில்லை, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்தபிறகே பேசியிருக்கிறார் என்கிறார்கள் த.வெ.க நிர்வாகிகள்.

“த.வெ.க-வில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவாகியுள்ளது. இருபது இடங்கள் வரை கொடுக்க தயாராக உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியில் முன்னணி பொறுப்பில் இருப்பவர்கள் எங்கள் அணிக்குள் வந்துவிடுவார்கள். அதற்கான எல்லா பேச்சுவார்தைகளும் முடிந்துவிட்டது. விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு மட்டுமே பாக்கி” என்கிறார்கள். 

பொதுச்செயலாளர் செல்வம் தலைமையில்  காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் ஒரு அணியாக தனி சின்னத்தில் போட்டியிட திட்டம் இருப்பதாக தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி என்றாலே கலகம் தான் போல!

Source link