புதுச்சேரியில் 5 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் நேருக்கு நேர் போட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில், திருபுவனை, மங்கலம், நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு ஆகிய 5 தொகுதிகளில் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்கள் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., – பா.ஜ., – அ.தி.மு.க., அடங்கிய தே.ஜ., கூட்டணியும், காங்., – தி.மு.க., – கம்யூ., – வி.சி.க., ஆகிய கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணியும் களமிறங்கி உள்ளன.

ஆனால், இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு, வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் வரை நீடித்து, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்., -16; தி.மு.க., 14 தொகுதிகளை பங்கீட்டு கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

தனக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியை, வி.சி.க.,விற்கு தி.மு.க., ஒதுக்கியது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள திருமாவளவன் மறுத்துவிட்டார். அவர், ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய மூன்று தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தார்.

‘இண்டி’ கூட்டணியில் உள்ள மா.கம்யூ.,விற்கும் தொகுதி ஒதுக்காததால், முத்தியால்பேட்டை, பாகூர், திருபுவனை, லாஸ்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இ.கம்யூ., கட்சியினர் தட்டாஞ்சாவடி, உழவர்கரை தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தி.மு.க., விற்கு ஒதுக்கிய காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மங்கலம், திருபுவனை ஆகிய ஐந்து தொகுதிகளில் காங்., வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இந்த 5 தொகுதிகளில் காங்., – தி.மு.க., வேட்பாளர்களே நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், அந்த கட்சி வேட்பாளரை தவிர, மற்ற கட்சி வாபஸ் பெற வைக்க திமுக- காங்., தலைமை நிர்வாகிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் அதை வேட்பாளர்கள் கண்டுகொள்ளாமல், ஓட்டு சேகரிப்பதில் இறங்கி விட்டனர். இதனால் இண்டி கூட்டணியில் குழப்பமான சூழல் நீடிக்கிறது. இந்த குழப்பம், மனு வாபஸ் நாளான நாளைக்குள் (மார்ச் 26) முடிவுக்கு வராவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகும் என்கின்றனர் கட்சியினர்.

Source link