தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த 8 தொகுதிகள் எவை என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. குறிப்பாக பொதுத் தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் பெரும் குழப்பம் நீடிப்பதாக சொல்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிடுகிறது விடுதலை சிறுத்தைகள்.
2021-ல் 4 தனித் தொகுதிகளும் 2 பொதுத் தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில் இம்முறை கூடுதலாக இரண்டு தனித் தொகுதிகள் என 6 தனித் தொகுதிகளை வி.சி.க பெறவுள்ளது.
அதில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், விழுப்புரம் மாவட்டம் வானூர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் ஆகிய நான்கு தொகுதிகளை உறுதியாக பெறுகிறது வி.சி.க.
இதுபோக பொன்னேரி, ஸ்ரீபெரும்பதூர், பூந்தமல்லி, புவனகிரி, அரூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகியவற்றில் இரண்டு தொகுதிகளையும் தேர்வு செய்யவுள்ளனராம்.
நம்மிடம் பேசிய வி.சி.க நிர்வாகிகள், “தனித் தொகுதிகளில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. ஆனால் எந்தெந்த பொதுத் தொகுதிகளை பெறப் போகிறோம் என்ற குழப்பம் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.
வி.சி.க போட்டியிடும் பொதுத் தொகுதிகள் குறித்து விவரப்புள்ளிகளிடம் விசாரித்தோம். “2021-ல் திருப்போரூர், நாகை என இரண்டு தொகுதிகளை பெற்று வெற்றியும் பெற்றது கட்சி. நாகையில் ஆளூர் ஷாநவாஸும், திருப்போரூரில் எஸ்.எஸ் பாலாஜியும் வென்றனர்.

ஆனால் இந்த தேர்தலில் திருப்போரூர் தொகுதியை மீண்டும் தர திமு.க தயாராக இல்லை. அங்கே பா.ம.க களமிறங்கும் நிலையில் தி.மு.க சார்பில் இதயவர்மன் களமிறங்க வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறார்.
திருப்போரூரை திரும்ப கொடுத்துவிடுங்கள் என வி.சி.க தலைமையிடமும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற முனைப்பு காட்டுகிறது. மேலும் தி.மு.க நாகை மாவட்டச் செயலாளர் கெளதமன் அமைச்சர் அன்பில் மகேஷ் வாயிலாக முயல்கிறார், தமிமுன் அன்சாரிக்கு தி.மு.க கூட்டணியில் தொகுதி கிடைத்தால் அவரும் நாகையை கேட்பார். ஆகையால் வி.சி.கவுக்கு நாகை கிடைக்கும் எனச் சொல்ல முடியாது.

ஆகவே வி.சி.க விரும்பும் திருப்போருர், நாகை கைவிட்டுப் போனால் ராயபுரம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், சோழிங்கநல்லூர் ஆகியவற்றில் இரண்டை தேர்வு செய்ய வாய்ப்புகள் உண்டு. ஆனால் வி.சி.க-வின் விருப்பம் என்பது நாகை, திருப்போரூரை திரும்பப் பெறுவதுதான்” என்றனர்.
