2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடித்த கையோடு, கூட்டணி கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
‘தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்’ என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி. நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
