தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வியூகத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தி.மு.க அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில், செல்வாக்குமிக்க 13 அமைச்சர்களின் தொகுதிகள் மற்றும் சபாநாயகரின் தொகுதி என மொத்தம் 14 இடங்களை அ.தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து அளித்துள்ளது.
அ.தி.மு.க கூட்டணியில் இம்முறை பா.ஜ.க-வுக்கு மிக முக்கியமான அமைச்சர்களின் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை கோட்டையில் பா.ஜ.க களம் காண்கிறது.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் நாசர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரின் தொகுதிகளான ஆவடி, திருப்பத்தூர் தொகுதிகளும் பா.ஜ.க வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவுவை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பையும் பா.ஜ.க-வுக்கு தான் கொடுத்துள்ளது அதிமுக. இதுதவிர அமைச்சர்கள் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி, மதிவேந்தனின் ராசிபுரம் தொகுதிகளும் பா.ஜ.க-வுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
