தேர்தல் பிரசாரத்தில் கதைசொல்லி இலவசத்தை விமர்சித்த சீமான்!

சேலம்: ‘‘நாங்கள் ஆயிரம், இரண்டாயிரம், பிரிட்ஜ் (Fridge), வாஷிங் மெஷின் (Washing Machine) என எதையும் இலவசமாகத் தர மாட்டோம். அவையெல்லாவற்றையும் நீங்களே வாங்கிக்கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம்” என தேர்தல் பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பனை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அவர் பிரசாரத்தில் பேசியதாவது: ஒரு சொட்டு தண்ணீரையும் தமிழர்களுக்கு தர முடியாது என்று சொல்லும் கர்நாடக காங்கிரஸ் கட்சி. அப்படி என்றால், ஒரு ஓட்டும் காங்கிரஸ் கட்சிக்கு போடமாட்டோம் என்று தமிழர்கள் ஏன் சொல்லுவதில்லை?

தமிழகத்தில் பெய்யும் மழையை கடலில் கலக்க விடாமல், ஏரி, குளம், குட்டைகளில் சேமித்தாலே நாம் அடுத்தவர்களிடம் தண்ணீருக்காகக் கையேந்தத் தேவை இல்லை. நாங்கள் ஆயிரம், இரண்டாயிரம், பிரிட்ஜ் (Fridge), வாஷிங் மெஷின் (Washing Machine) என எதையும் இலவசமாகத் தர மாட்டோம்.

அநீதிக்கு…

அவையெல்லாவற்றையும் நீங்களே வாங்கிக்கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம். கல்வி, மருத்துவம், தூய குடிநீர் ஆகியவற்றைத் தரமாகவும், சரியாகவும், சமமாகவும் அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம். ஒரு வண்டி நிறையக் குப்பையைக் கொளுத்த, ஒரு வண்டி நிறைய நெருப்பைக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. ஒரு தீக்குச்சி போதும். அதுபோல, அநீதிக்கு எதிராக உங்கள் பிள்ளைகள் நாங்கள் தீக்குச்சியாக இருக்கிறோம். எங்கள் நோக்கம், படித்தவரும், படிக்காதவரும் என வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது.

மனிதநேயம்

ஒரே அமைப்பில் உழைப்பவருக்கு வேலை, படித்தவருக்கு கணக்குப் பொறுப்பு. அனைவருக்கும் இடமுள்ள ஒருங்கிணைந்த பொருளாதாரம். இறுதியில், “படிக்காதவர்” என்ற நிலையே இல்லாத சமூகத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. ஜாதி அரசியலானால், அங்குச் சமத்துவமும் சகோதரத்துவமும் செத்துப்போகும்; ​மதம் அரசியலானால், அங்கு மனிதநேயம் செத்துப்போகும். ​பணம் அரசியலானால், அங்குப் பண்பாட்டு ஒழுக்கம் செத்துப்போகும்; ​மொழி மற்றும் இனமே அரசியலாக வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.

குட்டி கதை சொன்ன சீமான்!

தேர்தல் பிரசாரத்தில் கதைசொல்லி இலவசத்தை சீமான் விமர்சித்தார். அவர் கூறியதாவது: ஒரு வீட்டிற்கு ஒரு திருடன் திருட வருகிறான். வரும் போது ஒரு நாய் வாசலில் பார்த்து கொண்டே இருக்கிறது. ஒரு வேலை நமது வீட்டுக்காரருக்கு வேண்டியவராக இருப்பானோ?
சொந்த காரனாக இருப்பானோ என்று பார்த்துக்கொண்டே இருக்கிறது.
அது கத்தவில்லை, கடிக்கவில்லை. ஏறி குதித்து போகிறான். மாடியில் ஏறுகிறான், நாய் பார்த்துக்கொண்டே இருக்கிறது. அவன் அந்த நாயை பார்க்கிறான், அது அமைதியாக தான் இருக்கிறது. இந்த நாய் பார்த்துக்கொண்டு இருப்பதை பார்த்த திருடன், சத்தம் போட்டு வீட்டு காரனை எழுப்பி விட்டுவிடும் என்ற பயத்தில் அவன் கொண்டு வந்த ஒரு எலும்பு துண்டை எடுத்து போடுகிறான்.

நாய் போடும் போது சுதாரித்து கொண்டு நமது வீட்டு காரருக்கு வேண்டியவன் அல்ல, திருட்டு பையன் என நினைத்து பாய்ந்து கடித்துவிட்டது.
நாய்க்கு தெரியுது, இந்த எலும்பு துண்டை போட்டால் திருடுவான் என்று, நமக்கு தெரியல, இந்த மிக்சி தருகிறேன், கிரைண்டர் தருகிறேன்.

பிரிட்ஜ், அரிசி, பருப்பு, 2 ஆயிரம் ரூபாய் தருகிறேன், தா, உங்கள் அப்பன் வீட்டு சொத்தை விற்று தருவீயா? இல்லை எங்கள் அப்பன் வீட்டு வரியை எடுத்து தருவீயா? எங்கிருந்து கொடுப்பாய், இலவசத்தில் இழக்கிற பணத்தை எங்கிருந்து எடுப்பாய் இதுதான் கேள்வி. இவ்வாறு கதை சொல்லி இலவசத்தை சீமான் விமர்சனம் செய்தார்.

Source link