திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் போட்டி என்றும், இங்கு பாஜகவுக்கு அளிப்பவை வீணான வாக்குகள்தான் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரள தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், ‘‘எனது முழு கவனமும் கேரள மாநில தேர்தல் மீதுதான் உள்ளது. அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள எனது சகாக்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளாவைப் பொறுத்தவரை மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இம்மாநிலத்தில் பாஜக என்பது முற்றிலும் புறக்கணிக்கத்தக்க சக்தி அல்ல என்றாலும், உண்மையான போட்டி என்பது ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடது ஜனநாயக முன்னணிக்கும் இடையேதான் உள்ளது. எனவே, பாஜகவுக்கு அளிக்கும் வாக்குகள் என்பது வீணான வாக்குகள்தான்’’ என தெரிவித்துள்ளார்.
