நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்குத் தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்குத் தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இதைக் கண்டித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி.
உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.
