டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்தியா உள்ளிட்ட 5 நட்பு நாடுகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அந்நாட்டின் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: பல கப்பல் உரிமையாளர்கள் மற்றும் இந்த கப்பல்களை வைத்திருக்கும் பல நாடுகள், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடக்க உதவ வேண்டும் என எங்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களில் பல நாடுகள் எங்களின் நட்பு நாடுகள். மற்றும் ஒரு சில காரணங்களுக்காக அதற்கு சம்மதித்தோம். எங்கள் ராணுவத்தினர், கப்பல் பாதுகாப்பாக பயணிக்க உதவி செய்வார்கள்.
இதற்கு உதாரணமாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் இந்தியா குறித்த செய்திகளை பார்த்திருப்பீர்கள். சில நாட்களுக்கு முன்னர், அந்நாடுகளில் இரண்டு கப்பல்கள் பாதுகாப்பாக சென்றன. இன்னும் சில நாடுகள், வங்கதேசத்தின் கப்பலும் சென்றிருக்கும் என நம்புகிறேன். அந்த நாடுகள் எங்களுடன் பேசுவதுடன், ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இது எதிர்காலத்திலும், போருக்கு பிறகும் தொடரும் என நம்புகிறோம்.
ஈரான் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. எங்களின் எதிரிகள் மற்றும் அவர்களது நட்புநாடுகளின் கப்பல்கள் கடந்து செல்வதற்கு அனுமதிக்க முடியாது. மற்றவர்களுக்கு அந்தப் பாதை திறந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
