கள்ளக்குறிச்சி: பிள்ளைகளை பெற்றுக்கொடுங்கள். நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம். 3 வயதிலிருந்து பிள்ளைகளை என்கிட்ட கொடுத்துடுங்க என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: குளிர்சாதனப் பெட்டி, மின்விசிறி, அரிசி, பருப்பு, வேட்டி, சேலை இவையெல்லாம் அடிப்படைத் தேவைகள். இவையெல்லாம் ஒரு தனிமனிதன் தன் உழைப்பினால் வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், இவற்றை அரசு இலவசமாகக் கொடுக்கிறது. எனக்கு நானே மருத்துவமனை கட்டி மருத்துவம் செய்துகொள்ள முடியாது; எனக்கு நானே பள்ளிக்கூடம் கட்டிப் படிக்க முடியாது. ஆனால், இவற்றை அரசு மக்களுக்குச் சரியாக, சமமாக, தரமாகத் தருவதில்லை.
கொடுத்துடுங்க…
நமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பை கொடுக்கிறேன். பிள்ளைகளை பெற்றுக்கொடுங்கள். நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம். பிள்ளைகள் உங்கள் வீட்டின் செல்வங்கள் அல்ல. நம் நாட்டின் செல்வங்கள் என்று சட்டங்கள் இயற்றுவேன்.
3 வயதிலிருந்து பிள்ளைகளை என்கிட்ட ஒப்படைத்து விட வேண்டும். அது எவ்வளவு தூரம் படிக்கிறதோ, அரசு படிக்க வைக்கும். காரணம் நாட்டின் செல்வங்கள். ஒரு நாட்டின் செல்வத்தில், ஆக பெரிய செல்வம் அறிவு செல்வம். அந்த அறிவு செல்வத்தை எனது நாட்டு பிள்ளைகளுக்கு கொடுப்பேன். வேறு மருத்துவம் மக்கள் தேவை. அது மகத்தான சேவை.
வலிமை மிக்க ஆயுதம்
உலக தரத்திற்கு கட்டணம் இல்லாமல், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல், தரமாக ஆக சிறந்த மருத்துவத்தை கொடுப்பேன். தனியாரில் என்ன தரம் இருக்கிறது என்று நீ நினைக்கிறாயோ, அதனை தாண்டி நல்ல தரத்தில் மருத்துவத்தை கொடுப்பேன். வாக்கு என்பது வெறும் காகிதமோ அல்லது பொத்தானோ அல்ல; அது ஒரு வலிமை மிக்க ஆயுதம். உங்களது ஒற்றை வாக்கு உலகம் திரும்பிப் பார்க்க வைக்கும் வாக்காக மாற்ற முடியும்.
அடிப்படை தேவைகள்
அந்த ஒரு வாக்குதான் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. கடந்த காலங்களில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சியைப் பார்த்துவிட்டீர்கள். தற்போது ஸ்டாலின் ஆட்சியையும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
இவர்கள் அனைவரும் மாற்றி மாற்றி ஆட்சி செய்தும் மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. எனவே, ஒருமுறை உங்கள் பிள்ளையாகிய என்னிடம் ஆட்சியைத் தாருங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.
